www.rupeedesk.in

வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?



வாழ்க்கையில் பொருளாதார வளர்ச்சியை அடைய வேண்டும் என்று நினைக்கிற அனைவருக்குமே மிக முக்கியமானது வங்கி சேமிப்புக் கணக்கு. ஆனால், இன்றைய நிலையில் வேலை மாறுவது அடிக்கடி நடக்கும் விஷயமாக மாறிவிட்டது. இதனால் ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ஒரு வங்கிக் கணக்கு வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது. அல்லது வேறு சில காரணங்களுக்காக புதிய வங்கிக் கணக்கு திறக்க வேண்டிய சூழலும் ஏற்படுகிறது. இந்த நிலையில், ஏற்கெனவே உள்ள வங்கிக் கணக்கு பரிவர்த்தனைகள் எதுவும் நடக்காமல் இருக்கும்பட்சத்தில் நம் பணம் முடங்கிப் போவதற்கு வாய்ப்புள்ளது. நம் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் அதில் கோடி ரூபாய் பணம் இருந்தாலும், ஒரு பைசாகூட உடனடியாக எடுக்க முடியாது என்பது முக்கியமான விஷயம்.

முடக்கப்பட்ட வங்கிக் கணக்கை என்ன செய்ய வேண்டும், இப்படி வங்கிக் கணக்கு முடக்கப்படுவ தால் ஏதேனும் பிரச்னை  வருமா? பரிவர்த்தனை நடக்காதது மட்டும்தான் முடக்கப்படுவதற்கு காரணமா அல்லது வேறு காரணங்கள் இருக்கிறதா என்கிற கேள்விகளை ஓரியன்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் வங்கியின் கிளை மேலாளர் எம்.பாலகிருஷ்ணனிடம் கேட்டோம்.


இரண்டு வருடம் கெடு!

‘‘ரிசர்வ் வங்கியின் ஆணைப்படி, ஒரு சேமிப்புக் கணக்கோ, நடப்புக் கணக்கோ இரண்டு வருடத்துக்கு எந்தப் பரிவர்த்தனையும் நிகழாமல் இருக்குமானால் செயல்படாதக் கணக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு முடக்கப்படும். ஆனால், குறைந்தபட்சமாக ஒரு வருடம் வரை எந்தவொரு பரிவர்த்தனையும் நடக்காவிட்டால் வங்கித் தரப்பிலிருந்து வாடிக்கை யாளருக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

வாடிக்கையாளர்கள் உடனடியாக செயல்பட்டு, தங்களுடைய வங்கிக் கணக்கைப் புதுப்பித்துக் கொள்ள தங்கள் கணக்கில் ஒரு தொகையைப் போடவோ அல்லது எடுக்கவோ செய்தால், செயல்படாதக் கணக்காக எடுத்துக்கொள்ளப்படாது. ஆனால், இந்த அறிவுறுத்தலுக்குப் பிறகும் வங்கிக் கணக்கில் எந்தப் பரிவர்த்தனையும் நடக்காவிட்டால், அந்தக் கணக்கு செயல்படாதக் கணக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு முடக்கப்படும்.

கேஒய்சி கட்டாயம்!

கேஒய்சி குறித்த தகவல்கள் தரப்படாமல் இருந்தாலும், வங்கிக் கணக்கு முடக்கப்படுவதற்கு அது ஒரு காரணமாக இருக்கலாம். வங்கிக் கணக்கைப் பயன்படுத்த தான் அளித்துள்ள விவரங்கள் முற்றிலும் உண்மையானவை என்று வாடிக்கையாளர் அளிக்கும் உறுதிமொழி படிவம் தான் இந்த  கேஒய்சி ஆகும்.

வாடிக்கையாளர்கள் இந்த கேஒய்சி படிவத்தைத் தாக்கல் செய்யாமல் இருந்தாலும் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும். ஏனெனில் வாடிக்கையாளர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை தாக்கல் செய்ய கேஒய்சி என்ற படிவம் அளிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வங்கித் தரப்பிலிருந்து வாடிக்கையாளர்களுக்கு மூன்று மாதத்துக்குள் கேஒய்சி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற நினைவூட்டல் கடிதம் அனுப்பப்படும். இந்தக் காலத்தில் வாடிக்கையாளர்கள் கேஒய்சி படிவத்தை தாக்கல் செய்து தங்களது வங்கிக் கணக்கை புதுப்பித்துக் கொள்ள முடியும்.

இந்த கேஒய்சி படிவத்தைத் தாக்கல் செய்ய ஆறு மாதங்கள் வரை அவகாசம் வழங்கப்படும். அதற்குப் பிறகும் கேஒய்சி படிவத்தைத் தாக்கல் செய்யவில்லை எனில் அந்தக் கணக்குகளின் அனைத்து நடவடிக்கைகளும் முடக்கப்படும்.

குறைந்தபட்ச இருப்பு குறைந்தால்?

சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச தொகை இருப்பில் இருக்க வேண்டும் என்பது கட்டாயம். இந்தத் தொகை வங்கிக்கு வங்கி மாறும். அது நிறுவனத்தில் தொடங்கப்பட்ட கணக்காக இருப்பின் பூஜ்ய இருப்பில் இருக்கலாம். இதுமாதிரியான ‘சேலரி அக்கவுன்ட்டுகள்’ தவிர வேறு வங்கி சேமிப்புக் கணக்கிலும் குறைந்தபட்ச இருப்பு குறைவதால், அந்த வங்கிக் கணக்கு முடக்கப்படாது.

மேலும், வங்கி சேமிப்புக் கணக்கு நிர்வாகம் செய்வதற்காக அந்தக் கணக்கில் உள்ள தொகையில் இருந்து குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை கட்டணமாக பிடிப்பதுண்டு. மேலும், ஏடிஎம் கார்டு சேவை, எஸ்எம்எஸ் சேவை, செக் கிளியரன்ஸ் போன்ற வற்றுக்காகவும் கட்டணம் பிடிப்பதுண்டு. இதனால் இருப்பில் உள்ள தொகை குறைய வாய்ப்புள்ளது. தொடர்ந்து செயல்படும் கணக்காக இருந்தால் எந்தப் பிரச்னையும் இல்லை.

ஆனால், இரண்டு வருடங்கள் வரை ஒரு வங்கிக் கணக்கு செயல்படாமல் இருந்தால், அது முடக்கப்படும். குறைந்தபட்ச கட்டணத்தை வைக்கவில்லை எனில், சிபில் ஸ்கோரில்  பிரச்னை வர வாய்ப்பில்லை. ஆனால், பிற்பாடு உங்கள் கணக்கை  புதுப்பிக்கும்போது  உங்களுக்கான கட்டணமும், அபராதமும் பிடித்துக்கொள்ளப்படும்.

முடங்கிய கணக்கைப் புதுப்பிப்பது எப்படி?

வங்கிக் கணக்கு முடக்கப்பட் டால் அதனைப் புதுப்பிக்க ஒரு விண்ணப்பக் கடிதம் எழுதித் தரவேண்டும். அதனுடன் உங்களுடைய சரியான முகவரி, அடையாள அட்டை, பான் எண், ஆதார் எண் ஆகியவற்றைக் கொண்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

முடக்கப்பட்ட கணக்கு தொடங்கிய புதுப்பிக்க எந்தக் கட்டணமும் இல்லை. ஒருவேளை கணக்கு தொடங்கிய உரிமையாளர் இறந்திருந்தால், அவர்  குறிப்பிட்டுள்ள நாமினியா னவர் மேற்சொன்ன ஆவணங்களுடன் கணக்கைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.

வங்கிக் கணக்கு முடங்காமல் இருக்க..!

வங்கிக் கணக்குகள் முடங்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.

1. அடிக்கடி பயன்படுத்துகிற குறைந்தபட்சம் இரண்டு வங்கிக் கணக்குகளை மட்டுமே வைத்துக்கொள்வது நல்லது.
இனி இந்த வங்கிக் கணக்குகளை பயன்படுத்தும் வாய்ப்பு இல்லை என்று நீங்கள் நினைத்தால், உங்களிடம் இருக்கும் பிற வங்கிக் கணக்கு களை உடனடியாக முடித்து விடலாம்.

2. என்றாவது ஒருநாள் ஒரு வங்கிக் கணக்கு தேவைப்படும் என்று நீங்கள் நினைத்தால், அந்தக் கணக்கில் தொடர்ந்து பணத்தைப் போடுவதும் எடுப்பதும் அவசியம்.

3. பயன்படுத்தும் கணக்கு களிலிருந்து அவ்வப்போது பயன்படுத்தாத கணக்குகளுக்குப் பணப் பரிமாற்றம் செய்யலாம்.

4. நிரந்த இருப்புக் கணக்கு அல்லது மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றின் மூலம் வரும் வருமானத்தைத் தொடர்ந்து பயன்படுத்தாத கணக்கில் சேமித்து வரலாம்.

இப்போது ஏடிஎம், நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் போன்ற பல வசதிகள் உள்ளன. இவற்றைப் பயன்படுத்தி தங்களுடைய கணக்கை எப்போதும் செயல்பாட்டில் வைத்து முடங்காமல் பார்த்துக் கொள்ளலாமே!

புதிதாக வேலைக்குச் சேருபவர்கள் எப்படிச் சேமிக்க வேண்டும்?

புதிதாக வேலைக்குச் சேருபவர்கள் எப்படிச் சேமிக்க வேண்டும்?


இந்தக் காலத்து இளைஞர்கள் படித்து முடித்ததுமே ஓரளவுக்கு நல்ல வருமானம் தரும் வேலையில் சேர்ந்து சம்பாதிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். கல்லூரியில் படிக்கும் வரை வீட்டிலிருந்து பணம் வாங்கிச் செலவு செய்தவர்களுக்கு, சம்பாதிக்கத் தொடங்கியபின் சேமிப்பு என்பது சற்று புரியாத, கடினமான விஷயமாகவே இருக்கும். இதனால் விடுமுறை நாட்களில் மால்களில் உலாத்துவது, ஹோட்டல்களில் விலை உயர்ந்த உணவு சாப்பிடுவது, அடிக்கடி  செல்போன் மாற்றுவது என பலவற்றுக்கும் அதிக செலவு செய்து, பணத்தை இஷ்டத்துக்கு கரைத்துக் கொண்டிருப்பார்கள்.

வாங்கும் சம்பளத்திலிருந்து ஒருவரால் எவ்வளவு சேமிக்க முடியும், அதை எப்படிச் சேமிக்கலாம் என்பது போன்ற திட்டங்கள் எதுவும் இல்லாமல் இருப்பதே இன்றைய இளைஞர்கள் சேமிப்பில் கவனம் செலுத்தாமல் இருப்பதற்கு முக்கியக் காரணம். புதிதாக வேலைக்குச் சேருபவர்கள் தங்களது வருமானத்துக்கு ஏற்றவாறு சேமிக்க எப்படித் திட்டமிட வேண்டும் என்பது குறித்து வெல்த் டிரைட்ஸின் நிதி ஆலோசகர் அபுபக்கரிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

‘‘இன்றைய இளைஞர்கள் எப்படிச் சேமிக்க வேண்டும் என்று தெரியாமல் அதனைச் செய்யாமலே விட்டுவிடுகின்றனர். இந்த விஷயத் தில் அவர்கள் சில தவறுகளைச் செய்கிறார்கள்.



 என்னென்ன தவறுகள்!

வருமானத்தைவிட அதிகம் செலவு செய்வது, உடனடியாக ஆசைப்பட்டதை வாங்கத் தூண்டும் இம்பல்ஸ் நிலையைச் சமாளிக்க முடியாமல் இருப்பது, மாத செலவு களுக்குத் திட்டமிடத் தெரியாமல் இருப்பது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தாமல் இருப்பது என எந்தவிதமான எதிர்காலத் திட்டமும் இன்றி இருக்கிறார்கள் இந்தக் காலத்து இளைஞர்களில் பலர்.

தவிர, பார்ட்டிகள், எலெக்ட்ரானிக்  பொருட்கள் மீதான மோகம், ரிஸ்க் தெரியாமல் மோசமான முதலீடுகளில் பங்கெடுப்பது, சமுதாய அந்தஸ்துக்காக கிரெடிட் கார்டு வாங்கித் தேய்ப்பது, கார் மற்றும் வீட்டுக் கடன் வாங்கி கட்ட முடியாமல் தவிப்பது போன்ற தவறுகளைப் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவுடனே செய்து மாட்டிக்கொள்கிறார்கள்.

இன்னும் சிலர், சம்பளம் அதிகரித்தவுடன் சேமித்துக் கொள்ளலாம் என்று நினைத்து கடைசி வரை அதைச் செய்யாமலே விட்டுவிடுகிறார்கள். இன்னும் சிலர் சேமிக்க வேண்டும் என்று நினைத்தாலும், சரியான வழிநடத்துதல் இல்லாமல் ஏதேதோ முதலீடுகளில் பணத்தைப் போட்டு வாழ்க்கையை வீணாக்கிக் கொள்கின்றனர்.

 எப்படித் திட்டமிடுவது?

இன்றைய இளைஞர்கள் சேமிக்கத் திட்டமிடும் போது இரண்டு விஷயத்தைக் கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒன்று, அவர்களது வருமானம்; மற்றொன்று அவர்களுக்குக் கட்டாயமாக உள்ள செலவுகள். வருமானம் என்பது இன்றைய காலகட்டத்தில் சராசரியாக 15,000 ரூபாய் என்ற அளவில் துவங்கி, 40,000 ரூபாய் வரை உள்ளது. இதில் அவர்களுக்கு கட்டாயம் உள்ள செலவுகள் என்னென்ன என்பதைக் கவனிக்க வேண்டும்.

இன்றைய சூழலில் சொந்த ஊரில் வேலை பார்ப்பவர்களைவிட வெளியூருக்குப் போய் வேலைபார்க்கிறவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். வெளியூருக்குச் சென்று வேலை பார்க்கும்போது அங்குத் தங்குவ தற்கான கட்டணம், போக்குவரத்து மற்றும் உணவுக்கான கட்டணம் என்பது கட்டாயமாகிறது. தவிர, கல்விக் கடனுக்கான மாத தவணை என்பதும் கட்டாயமாகிறது. இவை தவிர்த்து, காப்பீட்டு பாலிசி ஏதும் எடுத்திருந்தால், அதற்கான பிரிமீயத்தைக் கட்டவும் செலவு செய்ய வேண்டியிருக்கும். இந்தச் செலவுகள் எல்லாம் போக, சரியாகச் செலவழித்தால், சில ஆயிரம் ரூபாயாவது கையில் நிச்சயம் மிஞ்சும். இதை எப்படிச் சேமிக்கலாம்?

முதலில், 15,000 ரூபாய் சம்பாதிப்பவருக்குக் கட்டாயத் தேவைகள் போக, 5,000 ரூபாயாவது மிச்சம் இருக்கும். இதனைக் குடும்பத் தேவைக்கு அனுப்புவது அவசியம். அப்படியொரு கட்டாயம் இல்லாதவராக இருந்தால், அந்த 5,000 ரூபாயை சேமிப்புக்குப் பயன்படுத்தலாம்.
25,000 ரூபாய்ச் சம்பாதிப்பவர் மற்ற செலவுகளும், குடும்பத்துக்கு அனுப்பிய பணம் போகவும், 5,000 ரூபாயை சேமிப்புக்காக எடுத்துவைக்கலாம். அதேபோல், 40,000 ரூபாய் வரை சம்பாதிப்பவர், எல்லா செலவுகளும் போக, குறைந்தது 10,000 ரூபாய் வரை சேமிக்கலாம்.



ஒருவர் மாதம் சராசரியாக 5,000 ரூபாய் சேமிக்க முடியும் எனில், அவரால் இன்னும் 35 வருடங்களில் எவ்வளவு சேமிக்க முடியும்? இதை ஓர் உதாரணம் மூலம் பார்ப்போம்.

மூன்று பேர் புதிதாக வேலைக்குச் சேருகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் மூன்று பேருக்கும் ஒரேமாதிரியான சம்பளம்தான். ஆனால், மூன்று பேரும் வேறுவிதமான சேமிப்பு முறையைப் பின்பற்றுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

முதல் நபர் 21 வயதிலிருந்து 30 வயது வரை 10 வருடம் மாதம் 5,000 ரூபாய் சேமிக்கிறார். அதன்பின் அவருக்குத் திருமணமாகி, குழந்தைகள் பிறந்தவுடன் அவர் சேமிப்பை நிறுத்திவிடுகிறார். 12% வருமானம் தரக்கூடிய முதலீட்டில் முதலீடு செய்திருந்தால், அவர் ஓய்வு பெறும்போது அவருக்குக் கிடைக்கும் தொகை 2.67 கோடி ரூபாயாக இருக்கும்.

இரண்டாமவர், முதல் பத்து வருடங்கள் எதுவும் சேமிக்காமல், 11-வது வருடத்திலிருந்து மாதம் 10,000 ரூபாயை சேமிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்படிச் செய்தால், அவர் ஓய்வு பெறும்போது அவரிடம் 2.43 கோடி ரூபாய் இருக்கும்.

மூன்றாமவர், 21 வயதிலிருந்து ஓய்வு பெறும் வரை தனது செலவுகள் மற்ற முதலீடுகள் எல்லா வற்றையும் தாண்டி, மாதம் 5,000 ரூபாயை 12% வருமானம் தரக்கூடிய முதலீட்டில் சேமிக்கிறார் எனில், ஓய்வு பெறும்போது அவரிடம் 3.89 கோடி ரூபாய் இருக்கும்.



இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், மாதம் 10,000 ரூபாய் சேமித்தவருக்கு அதிக வருமானம் கிடைக்காமல், மாதம் 5,000 சேமித்த வருக்குக் கிடைப்பதுதான். ஏனென்றால், 10,000 ரூபாய்ச் சேமிப்பவர் நீண்ட காலத்துக்குச் சேமிக்காததுதான் காரணம்.

இன்றைய இளைஞர்கள் தங்களது சேமிப்பை முதலீடு செய்யும்போது, கடன் மற்றும் ஈக்விட்டி பண்டுகளில் 30:70 அல்லது 40:60 என்ற விகிதத்தில் முதலீடு செய்யலாம். இதன்மூலம் சுமார் 12% வருமானம் கிடைக்கக்கூடும். ஈக்விட்டி பண்டுகளில் டைவர்ஸிஃபைடு ஃபண்ட் மற்றும் லார்ஜ், மிட் கேப் பண்டுகளில் சிறந்த பண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்தால், 12 சதவிகித வருமானத்தைப் பெற முடியும்’’ என்றார் அபுபக்கர்.

இன்றைய இளைஞர்கள் வேலைக்குச் சேர்ந்தவுடனேயே சேமிக்கத் துவங்குவதால், அதுவே ஒரு நல்ல பழக்கமாகிவிடும். இதனால் அநாவசியமாகச் செலவழிக்கும் பழக்கம் ஒழியும். கார் போன்ற ஆடம்பரங்களை நாடாமல் இருப்போம். இதனால் பின்நாட்களில் முதலீடு செய்வதற்குப் போதிய பணம் கிடைக்காமல் போகவும் வாய்ப்புண்டு.

இன்றைக்கு கையில் இருக்கும் பணத்தைத் திட்டமிட்டு செலவழித்தால்தான், எதிர்காலத்தில் கடன்காரன் என்கிற பட்டத்தைச் சுமக்காமல், எல்லா தேவைகளையும் நிறைவு செய்துகொள்கிற மாதிரியான நிலையை அடைய முடியும். இதற்கு முதல் தேவை திட்டமிட்டுச் செலவழிப்பதும், சேமிப்பதும்தான்!

Stock Market Training - Chennai

Stock Market Training - Chennai

             Register - Free Training for students
Free Intraday Tips : Join Our Whatsapp No : 9841986753

Stock Market Training - Chennai
Stock Market Training for beginners,Technical Analysis on Equity,Commodity,Forex Market,Learn Indian Equity Share Market Share Market Trading Basics: Fundamentals Of Share Market Trading training, Stock Market Basics - Share Market Trading Basics,Share Market Trading Questions/Answers/Faq about Share Market derivatives,rupeedesk,learn and earn share Equity,Commodity and currency market traded in NSE,MCX,NCDEX And MCXSX- Rupeedesk.Contact: 9094047040/9841986753/ 044-24333577, www.rupeedesk.in)





Free Share Market Training for College Students

Free Share Market Training for College Students 

Click Here  & Register To Get 1 day Free Training
 Join Our Whatsapp No : 9841986753


Free Share Market Training for College Students 

Stock Market Training for beginners,Technical Analysis on Equity,Commodity,Forex Market,Learn Indian Equity Share Market Share Market Trading Basics: Fundamentals Of Share Market Trading training, Stock Market Basics - Share Market Trading Basics,Share Market Trading Questions/Answers/Faq about Share Market derivatives,rupeedesk,learn and earn share Equity,Commodity and currency market traded in NSE,MCX,NCDEX And MCXSX- Rupeedesk.Contact: 9094047040/9841986753/ 044-24333577, www.rupeedesk.in)

Click Here  & Register To Get 1 day Free Training
 Join Our Whatsapp No : 9841986753

தங்க கடன் பத்திர முதலீடு... கவனத்தில் கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்..!

தங்க கடன் பத்திர முதலீடு... கவனத்தில் கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்..!



 தங்க முதலீடு மூலம் லாபம் பார்க்க விரும்புபவர்களுக்கு ஏற்றதாக  தங்க கடன் பத்திர (SOVEREIGN GOLD BOND) முதலீடு இருக்கிறது. இதன் ஐந்தாம் கட்ட தங்கப் பத்திர வெளியீடு, தொடங்கி உள்ளது . இதில் செப்டம்பர் 9 வரை முதலீடு செய்யலாம்.

 அதில் ஏன் முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கான 10 முக்கிய காரணங்களை பார்ப்போம்.

1. இப்போது ஒரு கிராம் மதிப்புள்ள தங்க கடன் பத்திரத்தில் கூட முதலீடு செய்யலாம். ரூ. 3150 (24 காரட் தங்கம் ஒரு கிராம் விலை) இருந்தால் முதலீட்டை ஆரம்பித்துவிட முடியும்.  தேவைக்கு ஏற்ப இந்த தங்க கடன் பத்திரங்களை 1, 5, 10, 50 மற்றும் 100 கிராம் மதிப்பில் வாங்கலாம்.

2. நிதி ஆண்டில் (ஏப்ரல் முதல் மார்ச் வரை) ஒருவர் அதிகபட்சம் 500 கிராம் மதிப்புள்ள தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யலாம்.

3. இந்தத் தங்க கடன் பத்திரங்களை காகித வடிவில் அல்லது டீமேட் (எலெக்ட்ரானிக்) வடிவில் நமது வாய்ப்பு வசதிக்கு ஏற்ப வாங்கிக் கொள்ளலாம்.

4. முதலீட்டு நோக்கில் தங்க நகையாக வாங்கும் போது உள்ள செய்கூலி, சேதாரம்  இதில் இல்லை.

 5. ஆரம்ப முதலீட்டு மதிப்புக்கு ஆண்டுக்கு 2.75% வட்டி வருமானமாக  கிடைக்கும். தங்கத்தின் விலை ஏற்றத்துடன் கூடுதலாக ஆண்டுக்கு 2.75% வட்டி  கிடைக்கும். வட்டி 6 மாதத்துக்கு ஒரு முறை தரப்படும்.

6. தபால் அலுவலகங்கள், பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகள்,  பாம்பே பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் (என்எஸ்இ) இந்த பத்திரங்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன என்பதால் முதலீடு செய்வது எளிது.

7.  பிஎஸ்இ, என்எஸ்இ பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டு இந்த தங்க கடன் பத்திரங்கள் மீது வர்த்தகம் நடப்பதால் பணத் தேவைக்கு எப்போது வேண்டுமானாலும் விற்றுக் கொள்ள முடியும்.

8. மூலதன ஆதாய வரி (கேப்பிட்டல் கெயின் டேக்ஸ்) கிடையாது.

9. முதிர்வு காலம் 8 ஆண்டுகள். பணம் தேவைப்படும்பட்சத்தில் 5,6,7வது ஆண்டுகளில் வெளியேற முடியும். இந்த தங்க கடன் பத்திரங்களை கடன் வாங்கும் போது அதற்கு ஜாமீனாக கொடுக்கலாம்.

10. ரூ. 20,000 வரையிலான முதலீட்டுக்கு ரொக்கப் பணமாக செலுத்தலாம்.  இதற்கு மேல் என்றால் டிடி, செக் கொடுக்கலாம்.  ஆன்லைன் மூலமும் முதலீடு செய்ய முடியும்.
இந்த தங்க கடன் பத்திர முதலீட்டில், முதிர்வின் போது தங்கமாக தர மாட்டார்கள். முந்தைய வாரத்தின் சராசரி தங்க விலை (24 காரட்) அடிப்படையில் பணமாக தருவார்கள். அதனை கொண்டு தேவைப்படுபவர்கள் தங்க நகைகள் வாங்கிக் கொள்ளலாம்

வங்கிக் கணக்கு துவக்க, பராமரிக்க ரிசர்வ் வங்கியின் 6 அதிஅவசிய கட்டளைகள்!

வங்கிக் கணக்கு துவக்க, பராமரிக்க ரிசர்வ் வங்கியின் 6 அதிஅவசிய கட்டளைகள்!


உங்கள் வங்கிக் கணக்கை திறப்பதற்கு மற்றும் பராமரிப்பதற்கு அவசியமான ஆறு விஷயங்களை RBI அண்மையில் தெரிவித்துள்ளது.


1. ஒரு 'அடையாளச் சான்று' , 'முகவரிச் சான்று' மற்றும் சமீபத்திய புகைப்படம் ஆகியவை ஒரு வங்கிக் கணக்கு திறக்க போதுமானது.

2. உங்கள் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, கடவுச்சீட்டு அல்லது NREGA கார்டு - இவை அடையாள மற்றும் முகவரிச் சான்று இரண்டிற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். பான் கார்டு, அடையாளச் சான்றுக்கு மட்டும் உதவுகிறது.

3. உங்கள் தற்போதைய முகவரி வங்கிக்குச் சமர்ப்பித்த முகவரிச் சான்றில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியிலிருந்து மாறுபட்டிருப்பின், உங்கள் புதிய முகவரி குறித்த ஓர் அறிவிப்பு போதுமானது.

4. உங்கள் வசம் அடையாளம் மற்றும் முகவரிச் சான்றுக்கான ஆவணம் இல்லை என்றாலும், நீங்கள் ஒரு சேமிப்பு வங்கி 'சிறிய கணக்கை' உங்கள் சமீபத்திய புகைப்படம் மற்றும் கையொப்பம் கொண்டு திறக்க முடியும். நீங்கள் ரூ.50,000 வரை கணக்கில் இருப்பு வைத்துக் கொள்ளலாம். மாதம் ஒன்றுக்கு ரூ.10,000 வரை பணம் எடுக்கலாம் மற்றும் நிதி ஆண்டு ஒன்றுக்கு ரூ.1 லட்சம் வரை மொத்தம் கிரெடிட்ஸ் பெறலாம்.


5. வங்கிகள் உங்களுடைய இடர் அபாய விவரம் சார்ந்து ஒவ்வொரு 2, 8 அல்லது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை கேஒய்சி விவரங்களை மறுஉறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவைப்படுகிறது.


6. கேஒய்சி செய்முறை குறித்து, உங்களுக்கு ஏதேனும் குறை இருப்பின், தயவுசெய்து உங்கள் வங்கிக்குப் புகார் அளிக்கவும். வங்கியின் பதில் உங்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை என்றால் நீங்கள் ஆர்பிஐ-ன் பேங்கிங் ஓம்பட்ஸ்மேன்-க்கு (வங்கி குறைதீர்ப்பாளர்) http://bankingombudsman.rbi.org.in -ல் புகார் அளிக்கலாம் என ஆர்பிஐ சொல்கிறது. 

நீங்கள் சரியாகத்தான் மெயில் அனுப்புகிறீர்களா? பதில் சொல்லும் பூமராங்!

நீங்கள் சரியாகத்தான் மெயில் அனுப்புகிறீர்களா? பதில் சொல்லும் பூமராங்!



இன்று பெர்சனலாக பேசுவதற்கும், சாட் செய்வதற்கும் பல வழிகளைக் கையாண்டாலும், அலுவலக ரீதியான தகவல் தொடர்புக்கு நாம் பயன்படுத்துவது இ-மெயில்தான். அதிலும் நம்மில் அதிகம் பேர் பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவைகளில் ஒன்று ஜிமெயில். மற்ற மெயில் சேவைகளை ஒப்பிடும் போது, ஜிமெயில் தரத்திலும், எளிமையிலும் அருமையாக இருந்தாலும், அதிலும் சில வசதிகள் இல்லை. குறிப்பாக நாம் அனுப்ப நினைக்கும் இ-மெயிலை சரியான நேரத்திற்கு டைம் செட் செய்தெல்லாம் அனுப்ப முடியாது. ஆங்கிலத்தில் அனுப்பும் போது நிறைய பிழைகள் கூட ஏற்படும். இந்தப் பிரச்னைகளுக்கு எல்லாம் தீர்வாக அமைகிறது 'பூமராங்' (Boomerang) ஜிமெயில் எக்ஸ்டென்சன்.

ஜிமெயில் பயன்படுத்துபவர்கள் தங்களது மெயில்களை குறிப்பிட்ட நேரத்திற்கு அனுப்பும்படி, இதில் schedule செய்து வைத்துக்கொள்ள முடியும். மேலும் ஆங்கிலத்தில் நாம் அனுப்பும் மின்னஞ்சல்களின் தரத்தையும், உடனே பூமராங் மீட்டர் காட்டிவிடுகிறது. நாம் புதிய மெயில் ஒன்றை கம்போஸ் செய்யும்போதே, நமது மெயிலின் கருத்துக்களின் தன்மை, மெயில் சப்ஜெக்ட்டின்  தரம், அந்த மெயிலுக்கு ரிப்ளை வர எந்தளவு வாய்ப்புள்ளது என ஒவ்வொன்றாக புட்டுபுட்டு வைக்கிறது பூமராங்.
கூகுள் குரோம் ஸ்டோரில், இந்த பூமராங் எக்ஸ்டென்சனை இன்ஸ்டால் செய்து, நமது மெயிலில் இணைத்துவிட்டால் போதும். பூமராங் ரெடி. புதிதாக மெயில் கம்போஸ் செய்யும் போதே, அதன் அருகில் பூமராங் ரெஸ்பான்டபிள் என்னும் Tab ஓபன் ஆகிவிடும். அதில் Subject Length, Word Count, Question Count, Reading Level, Positivity, Politeness, Subjectivity என 7 விஷயங்கள் நமது மெயிலை செயற்கை நுண்ணறிவு உதவியுடன் ஆராய்கிறது. அது பற்றிக் கொஞ்சம் சுருக்கமாகப் பார்ப்போம்!



Subject Length :

நாம் அனுப்பும் மெயில்களில் நிச்சயம் ' Subject' இருந்தே ஆகவேண்டும். ஒருவேளை  Subject குறிப்பிடாமல் வெறும் மெயிலை மட்டும் அனுப்பினால், அது முழுமையான மெயிலாக இருக்காது. அதற்கு சரியான ரிப்ளையும் வராது. எனவே  Subject நிச்சயம் ஒரு மெயிலில் இருக்க வேண்டும். அதே போல, தற்போது பெரும்பாலான மெயில்கள் மொபைலில் படிக்கப்படுவதால்,  Subject நீளம், 3 முதல் 5 வார்த்தைகளில் இருக்க வேண்டும். அதுவே சரியான வடிவம். மேற்கண்ட கண்டிஷன்களுக்கு ஏற்றவாறு உங்கள்  Subject இருக்கிறதா என்பதை பூமராங் காட்டுகிறது.

Word Count:

நமது மெயிலில் இருக்கும் வார்த்தைகளின் எண்ணிக்கையை இது காட்டுகிறது. ஒரு சரியான மெயிலில் வார்த்தைகள் 50 முதல் 125 வரை இருந்தாலே, போதுமானது. அதுவும் மிக முக்கியமான கேள்விகள், அவசரமான விஷயங்கள் ஆகியவற்றை சொல்லும் போது, வார்த்தைகளின் எண்ணிக்கை இன்னும் குறைவாக இருக்க வேண்டும். அப்போதுதான் அதன் வீரியம் அதிகரிக்கும். இதனை பூமராங் கணக்கிட்டு சொல்கிறது.



Question Count:

உங்கள் மெயிலுக்கு சரியான ரெஸ்பான்ஸ் வர வேண்டுமெனில், உங்கள் மெயிலில் குறைந்தது 3 கேள்விகளாவது இடம் பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான், உங்கள் மெயிலைப் படிப்பவர்களுக்கு அதற்கு ரிப்ளை செய்யத் தூண்டும். அதே சமயம் மிக அதிகமான கேள்விகள் இடம் பெற்றிருந்தால், அது படிப்பவர்களுக்கு எரிச்சலைத் தூண்டலாம். இந்த கேள்விகளின் எண்ணிக்கையை வைத்தும், நமது மெயிலை ஆராய்கிறது பூமராங்.



Reading Level:

நீங்கள் அனுப்பும் மெயில் படிப்பதற்கு எந்தளவு எளிமையாக இருக்கிறது என்பதை இது காட்டுகிறது. நீங்கள் எந்தளவு எளிமையான வார்த்தைகளை பயன்படுத்தி உங்கள் மெயிலை வடிவமைக்கிறீர்களோ, அந்தளவு அதன் தரமும் உயரும். எனவே மிகவும் சிக்கலான, உயர்தரமான ஆங்கில வார்த்தைகளைப் போட்டு சிக்கலாக்கிக் கொள்ள வேண்டாம்.
மேலே நாம் பார்த்த ஆப்ஷன்கள் எல்லாம் இலவசமாக உபயோகிக்கக் கூடியவை. நாம் பணம் கட்டிப் பயன்படுத்துவதற்காக,  Positivity, Politeness, Subjectivity என்னும் மூன்று ஆப்ஷன்களையும் தந்துள்ளது பூமராங். இது நாம் அனுப்பும், மெயில்களின் நளினம், அதிலுள்ள நேர்மையான விஷயங்கள், மெயிலின் வடிவம் ஆகியவற்றை ஆராய்ந்து கூறுகிறது. ஆனால் நமக்கு இதன் தேவை மிகவும் குறைவுதான் என்பதால், இலவச ஆப்ஷன்களே போதுமானவையாக இருக்கின்றன.

நீங்கள் எந்தத் தொழிலுக்கு ஏற்றவர்?

நீங்கள் எந்தத் தொழிலுக்கு ஏற்றவர்?

கண்டுபிடிக்கும் சூட்சுமங்கள்!


'சொந்தமாகத் தொழில் தொடங்கி, ஒரு பிசினஸ்மேனாக வலம் வரவேண்டும் என்பது என் மனத்தில் இருக்கும் நீண்டநாள் ஆசை. சொந்தத் தொழில் தொடங்குவதற்கு கையில் ஓரளவுக்கு பணமும் இருக்கிறது. ஆனால், என்ன தொழில் செய்வது என்று தெரியவில்லை. நல்ல லாபம் கிடைக்கிற மாதிரி, எனக்கு தோதான ஒரு பிசினஸை சொல்ல முடியுமா?’

இந்தக் கேள்வியைப் பலரிடம் கேட்டபின்னும் பதில் கிடைக்காமல் தவிப்பவர்கள் பலர். ஒருகாலத்தில் பிசினஸ் என்றாலே அதில் இறங்க பலரும் பயப்படுவார்கள். ஆனால், இன்றைக்கு நிறைய இளைஞர்கள் சொந்தமாகத் தொழில் தொடங்குவதில் ஆர்வமாக இருக்கிறார்கள். அரசாங்க வேலைவாய்ப்புகள் குறைந்தது; பிசினஸ் நடைமுறைகள் ஓரளவுக்கு எளிதாக இருப்பது என சமீபத்தில் நடந்த பல மாற்றங்களின் விளைவாக, இன்றைய இளைஞர்களின் கவனம் பிசினஸ் பக்கம் திரும்பியிருக்கிறது.

என்றாலும், தனக்கான தொழில் எது என்பதைத் தேர்வு செய்வதில் பலருக்கும் பலவிதமான குழப்பம். ஏற்கெனவே தெரிந்த தொழிலை செய்வதா, புதிதாகக் கற்றுக்கொண்டு செய்வதா என பல கேள்விகள். உங்களுக்கான தொழிலை நீங்கள் கண்டுபிடிப்பது எப்படி?



சொந்தத் தொழில் செய்வதற்கான விருப்பமுள்ளவர்களை மூன்று வகையாகப் பிரித்துக்கொள்வோம்:

1. முன்பின் வேலைக்குச் செல்லாத வர்கள் அல்லது தொழில் அனுபவம் சிறிதும் இல்லாதவர்கள் (இருபது வயதில் உள்ள இளம் வயதினர்).

2. சில ஆண்டுகள் வேலைக்குச் சென்றவர்கள் (முப்பது/நாற்பது வயதில் இருப்பவர்கள்).

3. ஓய்வுக்காலம் வரை வேலையில் இருந்தவர்கள் (ஐம்பது / அறுபதுகளில் இருப்பவர்கள்).

முதலில், இளம்வயதினரைப் பார்ப்போம். இந்த வயதினருக்கு அதிக முதிர்ச்சி இருக்காது. ஆகவே, ஓரிரு நண்பர்களுடன் அல்லது சற்று முதிர்ச்சியான நபர்களுடன் சேர்ந்து தொழில் ஆரம்பித்தால், தொழிலைக் கற்றுக்கொள்வதற்கு சிறந்த வாய்ப்பாக அமையும். இவர்கள் கல்லூரியில் படித்தபோது ஏதேனும் புராஜக்ட் செய்திருந்தார்களேயானால், அதைச் சார்ந்த தொழிலை ஆரம்பிக்கலாம்.

இளம் வயதினர் என்பதால் சற்று புதிய தொழில்நுட்பம் உள்ள தொழில்களை அல்லது ஆராய்ச்சி சார்ந்த தொழில்களை ஆரம்பிக்கலாம். வேறு தொழிலதிபர்களுடன் ஒப்பிடும்போது, கல்வி மற்றும் தொழில்நுட்பம் இவர்களிடம் இருக்கும் மிகப் பெரிய அனுகூலம் ஆகும்.

எந்தத் தொழில் செய்ய விருப்பம் என முடிவு செய்துவிட்டால், ஓராண் டாவது அந்தத் தொழிலில் உள்ள நிறுவனங்களில் வேலைக்குச் சேர்ந்து அனுபவம் பெறுங்கள். அனுபவம் இல்லாமல் எந்தத் தொழிலிலும் இறங்கி ஜெயிக்க முடியாது.

தொழில் ஆர்வமுள்ள இளம் வயது வாலிபர்களுக்கு எந்தத் தொழிலைப் பார்த்தாலும் அதைச் செய்வதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். இந்தச் சமயம் ஆர்வத்தை ஓரளவு கட்டுப்படுத்திக்கொண்டு யதார்த்தத்தில் தனக்கு எந்தத் தொழில் சரிப்பட்டு வரும் என நன்கு யோசிக்க வேண்டும்.

இந்த வயதினருக்குத் தொழில் அனுபவம் இருக்காது என்பதால், புதிதாக எந்தத் தொழிலில் வேண்டுமானாலும் இறங்கலாம். ஏனென்றால், எந்தத் தொழில் என்றாலும் இவர்களுக்குப் புதிய ஆரம்பம்தான். இவர்கள் முதலில் எந்தத் துறையில் நல்ல வாய்ப்பு உள்ளது, எந்தத் துறையில் நல்ல வளர்ச்சி இருக்கும் மற்றும் நல்ல லாபம் இருக்கும் என்பதைப் பார்க்க வேண்டும். அந்தத் துறை தங்களுக்குப் பிடிக்கிறதா என்றும் பார்க்க வேண்டும். அல்லது தங்களால் அந்தத் துறையை நேசிக்க முடியுமா என்று பார்க்க வேண்டும்.

பொதுவாக, இந்த வயதினரிடம் அதிகமாகப் பணம் இருக்காது என்பதால் குறைந்த முதலீடு உள்ள தொழில்களை நாடலாம். ஐ.டி, லாஜிஸ்டிக்ஸ், புரோக்கிங், டிரேடிங், சுற்றுலா திட்டமிடல், சர்வீஸ் மையங்கள் போன்ற சேவைத் தொழில்களை ஆரம்பிக்கலாம். சிறிய வயது என்பதால் அவர்களால் நன்றாக அவர்களின் சேவைகளை/ உற்பத்தி செய்யும் பொருட்களை மார்க்கெட்டிங் செய்ய முடியும்.

இனி, இரண்டாவது தரப்பினரைப் பற்றிப் பார்ப்போம். இவர்கள் சில ஆண்டு மட்டுமே வேலைக்குச் சென்றவர்கள். வேலை பிடிக்காமலோ அல்லது வேலை திடீரென்று போய்விட்டதாலோ அல்லது தொழில் செய்வதன் மீது உள்ள அளவிட முடியாத ஆர்வத்தினாலோ அல்லது இரண்டாவது வருமானம் தேடியோ தொழில் செய்ய முன்வருவார்கள்.

இந்த நிலையில் உள்ளவர்களுக்கு ஏற்கெனவே தொழில் பற்றிய ஞானம் ஓரளவுக்கு இருக்கும். அதன் நெளிவுசுழிவுகள் புரிந்திருக்கும். ஓரளவுக்கு முதிர்ச்சியும் வந்திருக்கும். அவர்கள் வேலை செய்த ஆண்டுகளைப் பொறுத்து, அந்தத் தொழில் பற்றிய விவரங்கள் நன்றாகத் தெரிந்திருக்கும். ஆகவே, இந்த அறிவை வைத்து அதே தொழிலையோ அல்லது அது சார்ந்த தொழிலையோ ஆரம்பிப்பதுதான் உசிதமாக இருக்கும்.

இவர்கள் ஏற்கெனவே பெரிய நிறுவனங்களில் வேலை பார்த்திருக்க லாம். அந்த நிறுவனத்திலிருந்து விலகியபின் அந்த நிறுவனத்துடன் நல்ல உறவு வைத்திருக்கலாம். அப்படி  இருப்பவர்கள், அந்த நிறுவனம் தரும்   கான்ட்ராக்ட் வேலைகளை எடுத்துச் செய்யலாம். அந்த நிறுவனத்துக்கு தேவையான பொருட்களை வெளியிலிருந்து வாங்கித்தரலாம்.

பெரிய தொழில் நிறுவனங்களில் இன்ஜினீயராக வேலை பார்த்தவர்கள், தன்னோடு நன்கு பழகிய, திறமைசாலி நண்பர்களுடன் சேர்ந்து, புதிதாக தொழில் தொடங்கலாம். ஏற்கெனவே செய்த தொழிலோடு உங்களுக்கு எந்தளவு உறவு உள்ளதோ, அந்த அளவுக்கு உங்கள் வெற்றி உறுதி!

இனி, மூன்றாவது பிரிவினரைப் பார்ப்போம். நான் ஓய்வுபெறுகிற வரை ஆட்டோமொபைல் துறையில் அல்லது வங்கியில் வேலை செய்தேன் என்று சொல்பவர்கள், அந்தத் துறை சார்ந்த தொழிலை ஆரம்பிப்பதுதான் சிறந்தது. காரணம், முன்பின் தெரியாத ஒரு தொழிலை இந்த வயதில் புதிதாகத் தெரிந்துகொண்டு செய்வதைவிட, ஏற்கெனவே நன்கு தெரிந்த தொழிலில் ஜெயிப்பது சுலபம். தவிர, வயது அதிகம் என்பதால், முற்றிலும் புதிய தொழிலில் நுழைந்து ரிஸ்கும் எடுக்க முடியாது.

உதாரணமாக, வங்கியில் வேலை பார்த்தவர்கள் வங்கிகளுக்கு ஆடிட்டிங் செய்துதரலாம் அல்லது லோன் பிராசஸிங் ஏஜென்சி நடத்தலாம். கடன் ஆலோசகராகத் தொழில் செய்யலாம். இப்படி பலவிதமான வாய்ப்புகள் இருப்பதை அவர்கள் எளிதாகக் கண்டுபிடித்து, அந்தத் தொழில் செய்து எளிதில் ஜெயிக்க முடியும்.

ஃப்ரான்சைஸிங் (Franchising)

என்னிடம் பணம் இருக்கிறது. ஆனால், நீங்கள் சொன்னதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது என்கிறவர்கள்   ஃப்ரான்சைஸிங் (Franchising)   முறையின் மூலம் தொழில் துவங்கலாம். இதில் ஃப்ரான்சைஸர் (Franchisor) தொழில் பற்றிய நுணுக்கங்கள், தொழிலுக்குத் தேவையான தளவாடங்கள், பொருட்கள் போன்ற அனைத்தையும் தொழில் ஆரம்பிப்பவருக்குத் தந்துவிடுவார். இதற்கான கட்டணத்தையும், கமிஷனையும் தந்துவிட்டு, வியாபாரத்தைப் பெருக்க வேண்டிய வேலை உங்களுடையது.

ஃப்ரான்சைஸிங் மூலம் என்னென்ன வாய்ப்புகள் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு, உங்களுக்குத் தோதான ஒரு தொழிலையும் தேர்ந்தெடுத்து ஜெயிக்கலாம்!

உங்களுக்கான தொழிலை கண்டுபிடிக்கும் சூட்சுமம் இப்போது புரிந்ததா?

மழைக் காலம் ; மோட்டார் இன்ஷூரன்ஸ் அவசியம் !

மழைக் காலம் ; மோட்டார் இன்ஷூரன்ஸ் அவசியம் !
மழையில் நனைந்தபடி டூவீலரை ஓட்டிச் செல்வது மனசுக்கு சந்தோஷமாக இருந்தாலும், அந்த நேரத்தில் பத்திரமாக வாகனத்தை ஓட்டிச் செல்வது ரிஸ்க்-ஆன விஷயம். சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் எந்த இடத்தில் பள்ளம் இருக்கும் என்று தெரியாது. எவ்வளவு கவனமாக வாகனத்தை ஓட்டினாலும், ஏதாவது பிரச்னை வந்து வாகனத்துக்கு அதிக செலவு வைத்து விடும். இப்படி திடீரென வரும் செலவிலிருந்து தப்பிக்க என்ன வழி?


எந்தவிதமான வாகனமாக இருந்தாலும் கட்டாயம் இன்ஷூரன்ஸ் எடுக்கவேண்டும்.  இன்ஷூரன்ஸ் எடுக்கும்போதே சில நூறு ரூபாயைக் கூடுதலாக பிரீமியம் செலுத்தி, அதிக பாதுகாப்பு பெறலாம். இதற்கு பாலிசி எடுக்கும் நிறுவனத்தில் என்னென்ன கூடுதல் கவரேஜ் உள்ளன என்பதை விசாரித்து அதன்பிறகு பாலிசி எடுப்பது நல்லது. மழைக் காலத்தில் வாகனங்களுக்கான இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்ன என்பதைச் சொல்கிறேன்.

ஒருங்கிணைந்த காப்பீடு: வாகனத்திற்கு இன்ஷூரன்ஸ் எடுப்பவர்களில் சிலர், சட்டப்படியாக எடுக்கவேண்டிய மூன்றாம் நபர் இன்ஷூரன்ஸ் பாலிசி மட்டும் எடுக்கிறார்கள். விபத்து ஏற்படும்போது எப்படியும் வாகனத்திற்கும் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, முடிந்தவரை வாகனம் மற்றும் மூன்றாம் நபர் இன்ஷூரன்ஸ் ஒருங்கிணைந்த காப்பீட்டைத் தேர்வு செய்வது நல்லது.

இன்ஜின் கவர்: மழைக் காலம் வந்துவிட்டாலே நகரங்களில் பெரும்பாலான சாலைகள் தண்ணீரால் நிரம்பிவிடுகின்றன. தண்ணீரில் வாகனத்தை ஓட்டும்போது பல நேரங்களில் இன்ஜினில் தண்ணீர் புகுந்துவிட வாய்ப்புள்ளது. சில சமயங்களில் வாகனம் தண்ணீரில் திடீரென நின்றுவிடவும் வாய்ப்புண்டு. வாகனத்தின் இன்ஜினை ஆன் செய்ய முயற்சிக்கும்போது இன்ஜின்  பழுதாகவும் வாய்ப்புண்டு. சாதாரணமாக எடுத்து வைத்திருக்கும் பாலிசியில் இதற்கு க்ளைம் கிடைக்காது. இன்ஜின் கவர் பாலிசியைக் கூடுதல் பிரீமியம் செலுத்தி எடுத்திருந்தால் க்ளைம் பெறலாம்.

ஜீரோ தேய்மான கவரேஜ்: இந்தக் கூடுதல் கவரேஜ் மூலம் வாகனத்தில் விபத்தின்போது ஏற்படும் பாகங்களின் சேதத்திற்கு க்ளைம் பெறமுடியும். அதாவது, வாகனத்தை வாங்கி சில ஆண்டுகள் கழித்து ஏதாவது முக்கியமான பாகத்தில் சேதம் ஏற்பட்டால், அந்த சேதத்திற்கான க்ளைம் தொகையை அப்போதைய மதிப்பிற்குதான் க்ளைம் செய்ய முடியும். இந்தக் கூடுதல் கவரேஜை எடுத்து வைத்திருந்தால் புதிய பாகத்திற்கான தொகையை க்ளைம் செய்ய முடியும். வாகனத்தில் தேய்மானம் என்பது வேகமாக இருக்கும். முக்கிய பாகத்தில் ஏதாவது சேதம் ஏற்பட்டால், அந்த பாகத்தை மாற்றவேண்டி இருக்கும். அப்போது தேய்மானம் போக பாகத்தின் மதிப்பை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் புதிய பாகத்தை வாங்கி மாற்றிக்கொள்ள முழுத் தொகையையும் தருவதுதான் ஜீரோ தேய்மான கவரேஜ்.

ரிட்டர்ன் டு இன்வாய்ஸ்: ஏதாவது மரத்தடியில் வாகனத்தை நிறுத்தும்போது அந்த மரம் வாகனத்தின் மீது விழுந்து, வாகனம் முழுவதுமாக சேதம் அடைவது. அல்லது கீழ்தளத்தில் வாகனத்தை நிறுத்தி வைக்கும்போது மழை நீர் வாகனத்தில் புகுந்து வாகனம் முழுவதும் சேதம் அடைவது மற்றும் வாகனம் வெள்ளத்தில் அடித்து செல்வது, வாகனத் திருட்டு போன்ற சமயங்களில் இந்த ரிட்டர்ன் டு இன்வாய்ஸ் கூடுதல் கவரேஜ் கைதரும்.

பொதுவாக, ஒவ்வொரு வருடமும் வாகனங்களுக்கான இன்ஷூரன்ஸ் பாலிசியைப் புதுப்பிக்கும்போது அதன் தேய்மானம் கழித்த மதிப்பிற்குதான் கவரேஜ் கிடைக்கும். ஆனால், இந்தக் கூடுதல் கவரேஜை எடுத்தால், புதிய வாகனம் வாங்குவதற்கு தேவைப்படும் முழுத் தொகையை க்ளைம் செய்ய முடியும்.  இன்றையச் சூழ்நிலையில் வாகனம் இல்லாத வாழ்க்கை என்பதை நினைத்துப் பார்க்கவே முடியாது.  எனவே, சில நூறு ரூபாய் பிரீமியத்தில் பல ஆயிரங்களைப் பாதுகாப்பதுதான் புத்திசாலித்தனம் என்பதைச் சொல்லவேண்டியதில்லை.

ஹெல்த் இன்ஷூரன்ஸ் போர்ட்டபிலிட்டி?

பாலிசிதாரர்களுக்குப் பயன் அளிக்குமா ஹெல்த் இன்ஷூரன்ஸ் போர்ட்டபிலிட்டி?


ஒரு நிறுவனத்தில் எடுத்த செல்போன் எண்ணை வேறு நிறுவனத்துக்கு மாற்றிக் கொள்ளும் வசதி ஏற்கெனவே நடைமுறையில் இருக்கிறது. இதேபோல, ஒரு நிறுவனத்தில் எடுத்த ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை வேறு இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு மாற்றிக் கொள்ளும் வசதி வந்திருக்கிறது.

இதை இன்ஷூரன்ஸ் போர்ட்ட பிலிட்டி என்கிறார்கள். அதாவது, ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தபின் அந்த நிறுவனத்தில் சேவைக் குறைபாடு இருந்தால், அந்த பாலிசியை வேறு நிறுவனத்துக்கு மாற்றிக்கொள்ள முடியும். இந்த வசதியை ஐஆர்டிஏ இரண்டு வருடங்களுக்கு முன்பே அறிமுகப்படுத்தினாலும், அது குறித்த விழிப்பு உணர்வு மக்களிடம் குறை வாகவே உள்ளது. இந்த புதிய வசதியின் கீழ் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை எப்படி மாற்றுவது என்பது குறித்துப் பார்ப்போம்.

ஏன் போர்ட்டபிலிட்டி?

இந்தியாவில் பல இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் உள்ளன. ஒரு நிறுவனத்தில் மெடிக்ளெய்ம் பாலிசி எடுத்தபின் அதன் சேவை திருப்திகரமாக இல்லை எனில், அந்த பாலிசியை வேறு இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு மாற்றிக் கொள்ள முடியும். இதற்கு எந்தவிதமான கட்டணமும் கிடையாது. தவிர, நீங்கள் ஏற்கெனவே எடுத்த பாலிசியில் இருந்த வசதிகள், நிறுவனம் மாறியபின்னும்  கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

 முக்கியமான 45 நாட்கள்!

ஏற்கெனவே உள்ள இன்ஷூரன்ஸ் பாலிசியைப் புதுப்பிப்பதற்கு 45 நாட்களுக்குமுன் இந்த வசதியைப் பயன்படுத்தி, ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனத்துக்கு இன்ஷூரன்ஸ் பாலிசியை மாற்றிக் கொள்ள முடியும். தனிநபர், ஃப்ளோட்டர் பாலிசிகளில் மட்டும் இல்லாமல் குரூப் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளிலும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

உதாரணமாக, வேலை பார்க்கும் நிறுவனத்தில் வைத்திருக்கும் குரூப் இன்ஷூரன்ஸ் பாலிசியில் குடும்ப உறுப்பினர்களுக்கான கவரேஜ் இருக்கும். இதில் ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனத்துக்கு மாறும் போது குடும்ப உறுப்பினர்களுக்குக் கவரேஜ் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. அந்த சமயத்தில், குரூப் இன்ஷூரன்ஸ் வைத்திருக்கும் நிறுவனத்தில் குடும்ப உறுப்பினர்களுக்கு, போர்ட்டபிலிட்டி வசதியின் கீழ் இன்ஷூரன்ஸ் எடுக்க முடியும். குரூப் இன்ஷூரன்ஸ் இருக்கும் நிறுவனத்தில் தான் இந்த பாலிசியை எடுக்க முடியும். வேறு நிறுவனத்தில் பாலிசி எடுக்க இந்த  போர்ட்டபிலிட்டி வசதியைப் பயன் படுத்த முடியாது.



மேலும், ஏற்கெனவே பாலிசி வைத்திருக்கும் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் நோ-க்ளெய்ம் இருந்தால், அதை இழக்க நேரிடும். அதாவது,       நோ-க்ளெய்ம் போனஸ் மூலமாகக் கூடுதல் கவரேஜ் வைத்திருந்தால், அந்த மொத்த கவரேஜூக்கான பிரீமியத்தைப் புதிய இன்ஷூரன்ஸ் நிறுவனம் வசூலிக்கும். ஏனெனில், நோ-க்ளெய்ம் போனஸ், பிரீமியத்தில் தள்ளுபடி என்பதெல்லாம் ஒவ்வொரு இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கும் வித்தியாசப்படும்.

 என்ன வசதி?

போர்ட்டபிலிட்டியை பயன்படுத்தி பாலிசியை வேறு நிறுவனத்துக்கு மாற்றும்போது காத்திருப்புக் காலம், ஏற்கெனவே உள்ள நோய்களுக்கான கவரேஜ் போன்றவை அப்படியே புதிய பாலிசிக்கு மாற்றிக்கொள்ள முடியும். அதாவது, சில நோய்களுக்குக் காத்திருப்புக் காலம் 4 ஆண்டு என வைத்துக்கொள்வோம். ஏற்கெனவே உள்ள நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் பாலிசி வைத்திருந்தால், புதிய நிறுவனத் தில் மீதமிருக்கும் ஒரு வருடம்தான் காத்திருப்புக் காலமாக இருக்கும்.

 எப்போது மாறலாம்?

இன்ஷூரன்ஸ் நிறுவனம் வழங்கும் சேவையில் ஏதாவது குறைபாடு இருக்கும்போது இந்த வசதியைப் பயன்படுத்தலாம். அதாவது, ஒவ்வொரு முறை க்ளெய்ம் செய்யும்போதும் காலதாமதம் ஏற்படுவது, நெட்வொர்க் மருத்துவமனை குறைவாக இருப்பது, இலவச தொலைபேசி சேவையில் சிக்கல், டிபிஏயின் தவறான அணுமுறை போன்ற சமயங்களில் இந்த வசதியைப் பயன்படுத்தி, நிறுவனம் மாறலாம்.

போர்ட்டபிலிட்டி வசதியைப் பயன்படுத்தி, பாலிசியை மாற்றும்முன் என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்பது குறித்து நியூ இந்தியா அஷ்ஷூயூரன்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் சேகர் சம்பத்திடம் கேட்டோம்.

 மாறும்முன்..!

“இன்ஷூரன்ஸ் பாலிசியில் போர்ட்டபிலிட்டி வசதியை பெரும்பாலும் வயது அதிகரிக்கும்போது தான் மாற்றுவோம். அந்த சமயத்தில் பாலிசிதாரர்களின் ரிஸ்க் அதிகரித் திருக்கும். பிரீமியமும் வித்தியாசப்படும். அதாவது, ஏற்கெனவே உள்ள நிறுவனத்தில் இருந்த பிரீமியம் புதிய நிறுவனத்தில் இருக்காது. எனவே, பாலிசியை மாற்றும்முன் புதிய பாலிசிக்கான பிரீமியத்தைக் கவனிப்பது நல்லது. சில நேரங்களில் அதிக ரிஸ்க் உள்ளது என உங்களின் பாலிசியை நிராகரிப்பதற்கான வாய்ப்பும் உள்ளது.

போர்ட்டபிலிட்டிக்கு விண்ணப்பம் செய்த 7 நாட்களுக்குள் புதிய இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்குத் தகவல் களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். இதில் ஏதாவது காலதாமதம் ஏற்பட்டா லும் விண்ணப்பத்தை நிராகரிக்கும் உரிமை புதிய இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு உள்ளது. தகவல்கள் பகிர்ந்து கொண்ட 15 நாட்களுக்குள் விண்ணப்பதாரருக்கு இன்ஷூரன்ஸ் பாலிசி குறித்த தகவல்களை நிறுவனம் தெரிவிக்க வேண்டும். அதாவது, பாலிசியை வழங்குகிறார்களா, இல்லையா என்பதைத் தெரிவிக்க வேண்டும்’’ என அனைத்து விதிமுறைகளையும் கூறினார்.

 பிரீமியம்!

பழைய இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் பிரீமியமும், புதிய இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் பிரீமியமும் வித்தியாசப் படுவதற்கான வாய்ப்புள்ளது. அதாவது, உங்களின் ரிஸ்க் அடிப்படையில் இந்த பிரீமியம் இருக்கும். எனவே, பாலிசியை மாற்றுவதற்குமுன் பிரீமியம் எவ்வளவு என்பதைத் தெரிந்துகொள்வது நல்லது.

 கவரேஜ்!

ஏற்கெனவே பாலிசியில் உள்ள கவரேஜ் தொகை, காத்திருப்புக் காலம், ஏற்கெனவே உள்ள நோய்களுக்கான கவரேஜ் ஆகியவை அப்படியே இருக்கும். ஆனால், பிற கவரேஜ் அதாவது, ஒரு சில நோய்களுக்காகக் கவரேஜ் தொகையில் கோ-பேமென்ட், சில மருத்துவப் பொருட்களுக்கு க்ளெய்ம் இல்லை போன்றவை இருக்கும்.

 பிற வசதி!

போர்ட்டபிலிட்டி வசதியின் கீழ் பாலிசியை மாற்றும்போது புதிய நிறுவனத்தில் நெட்வொர்க் மருத்துவமனைகள் அதிகம் உள்ளதா, கேஷ்லெஸ் வசதி இருக்கிறதா, அறை வாடகைக்கான சதவிகிதம் என்ன, பாலிசியைப் புதுப்பிப்பதற்கான கால அளவு என்ன?, எந்தெந்த நோய்களுக்குக் கோ-பேமென்ட் உள்ளது, எதற்கெல்லாம் க்ளெய்ம் கிடைக்கும், க்ளெய்ம் நடைமுறை என்ன என்பதை நன்கு ஆராய்ந்து பார்த்தபிறகு பாலிசியை மாற்றுவது நல்லது.

பிஸ்கட் தயாரிப்பு,ஏற்றுமதியும் செய்யலாம்!

பிஸ்கட் தயாரிப்பு,ஏற்றுமதியும் செய்யலாம்!


வாரம் ஒரு தொழில்!



நொறுக்குத் தீனி வகைகளில் பிஸ்கெட்டுக்கு உள்ள இடத்தை வேறு எதனாலும் பூர்த்தி செய்ய முடியாது. டீ, காபியோடு ஒன்றிரண்டு பிஸ்கெட்களை சாப்பிடுவது என்பது அன்றாட உணவு விஷயங்களில் பழகிப்போன ஒன்று. எளிதில் ஜீரணமாகிவிடும் என்பதால் குழந்தைகள், வயதானவர்கள் என அனைவரும் விரும்பிச் சாப்பிடும் சிறந்த உணவாக இருக்கிறது.

தவிர, சில மாதங்கள்வரை வைத்திருந்து விற்றாலும் பொருள் கெடாது என்பது இதிலுள்ள இன்னொரு பெரிய பிளஸ் பாயின்ட். விதவிதமான சுவையோடு, தரமாகவும் பிஸ்கெட் தயார் செய்து கொடுத்தால் மார்க்கெட்டில் நமக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்பதற்கு நம்மூர் பேக்கரிகள் நல்ல உதாரணம். அதுவே புதிய தொழில்நுட்பங்களோடு இறங்கும்போது பிராண்டட் நிறுவனங்களுடன் போட்டி போட்டு இத்தொழிலில் சாதிக்க வும் நிறையவே வாய்ப்புள்ளன.

சந்தை வாய்ப்பு!



பெருநகரம், சிறுநகரம் மற்றும் கிராமப்புறங்கள் என சந்தை வாய்ப்புகளை மூன்று விதமாகப் பிரிக்கலாம். பெருநகரங்கள் மற்றும் சிறுநகரங்களின் சந்தையை பிராண்டட் தயாரிப்புகள் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தாலும், கிராமப்புற மற்றும் மிகச்சிறிய நகரங்களின் சந்தையை லோக்கல் தயாரிப்புகள்தான் கைகளில் வைத்திருக்கின்றன. புதிதாக தொழிலில் இறங்கும்போது இந்த சந்தை வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது சுலபம். முக்கியமாக பேருந்து நிலையம், ரெயில் நிலையம், டீக்கடைகள், நெடுஞ்சாலை உணவகங்கள் போன்ற இடங்களில் அதிகளவிலான விற்பனை வாய்ப்புகள் உள்ளது. 50-60 கிலோ மீட்டருக்குள் இருக்கும் இதுபோன்ற இடங்களை மையப்படுத்தி டெலிவரி வேன் மூலம் விற்பனையைப் பெருக்கலாம்.
தயாரிப்பு முறை!

சுலபமான தயாரிப்பு முறைதான். கோதுமை மாவு அல்லது மைதா மாவுடன் சர்க்கரை, பால், வனஸ்பதி,  போன்ற மூலப்பொருட்கள் சேர்த்து பிசைந்து, சாதாரண வெப்பநிலையில் இரண்டு மணி நேரம் வைத்திருக்க வேண்டும். பிறகு 'டவ் மெஷின்’ மூலம் பூரி மாவு பதத்திற்கு கொண்டுவந்து, பிஸ்கெட் மோல்டிங் டிரேக்களில் வைத்து சரியான வெப்பநிலையில் சூடுபடுத்த வேண்டும். பதத்திற்கு வந்ததும் எடுத்து ஆறவிட்டு, பாக்கெட்களில் அடைத்தால் பிஸ்கெட்டுகள் விற்பனைக்குத் தயார்.

தரக்கட்டுபாடு

உணவு பதப்படுத்துதல் மற்றும் உணவுக் கலப்படத் தடுப்புத் துறைகளிலிருந்து அனுமதி பெறவேண்டும்.

நிலம் மற்றும் கட்டடம்!

இந்தத் தொழிலுக்கு குறைந்த பட்சம் 800 சதுரஅடி இடம் தேவைப்படும். நிலமாக வாங்கி கட்டடம் கட்டுவதற்குப் பதிலாக, கட்டடமாக வாங்குவது நல்லது. தேர்ந்தெடுக்கும் இடத்துக்கேற்ப விலை நிலவரம் இருக்கும். பிஸ்கெட் தயாரிக்க 400 சதுர அடி இடமும் மீதமுள்ள இடத்தில் பேக்கிங் மற்றும் சில்லறை விற்பனை செய்வதற்கும் பயன் படுத்தலாம். இதற்கு ரூபாய் 1.25  லட்சம் வரை செலவாகும்.

இயந்திரம்!

ஐம்பது டன் உற்பத்தி என்ற இலக்கு வைக்கலாம். ஆண்டுக்கு 330 வேலை நாட்கள், தினமும் 12-14 மணி நேரம் வேலை செய்தால் இந்த இலக்கை எட்டலாம். இயந்திரங்கள் புதுடெல்லி, செகந்தராபாத் போன்ற இடங்களில் கிடைக்கும். சிறிய அளவில் செய்ய நினைப்பவர்கள் மாவு பிசைவதற்கு வேலை ஆட்கள் வைத்துக் கொள்ளலாம். இது செலவை சற்று குறைக்கும்.


கூடுதல் செலவுகள்!

தயாரிப்பு செலவு மட்டுமல்லாமல் ஃபர்னிச்சர், அளவை சரி பார்க்கும் இயந்திரம், பேக்கிங் செய்ய, ஸ்டோர் செய்து வைக்க என்ற வகையில் 90,000 ரூபாய்வரை செலவாகும். தினமும் 20 ஹெச்.பி. மின்சாரமும், 500 லிட்டர் தண்ணீரும் தேவை.

மூலப் பொருள்கள்!

கோதுமை மாவு, மைதா மாவு, ஈஸ்ட், நெய் அல்லது வனஸ்பதி, சர்க்கரை, பால் அல்லது பால் பவுடர், உப்பு மற்றும் உணவு கலர் இவைதான் மூலப்பொருள். எல்லாமே தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கக்கூடிய பொருள்தான்; அதனால் உற்பத்தியில் தொய்வு இருக்காது.

வேலையாட்கள்!

முன்னனுபவம் உள்ள நபர் - 1

உதவியாளர்கள் - 2

விற்பனையாளர் - 1

வேன் அல்லது சிறிய ஆட்டோ ஓட்டத் தெரிந்த விற்பனையாளர் ஒருவர் என மொத்தம் ஐந்து நபர்கள் வேலைக்குத் தேவைப்படுவார்கள்.


உற்பத்திக்கு முந்தைய செலவுகள்!

நிர்வாகச் செலவுகள், சட்டப்பூர்வமான கட்டணங்கள், தொழில் தொடங்குவதற்கு முந்தைய முதலீட்டுக்கான வட்டி என 50,000 ரூபாய் செலவாகும்.

மானியம்

இத்தொழில் சிறுதொழிலுக்கு கீழ் வருவதால் மத்திய அரசிடமிருந்து மானியம் கிடைக்கும்.

சுறுசுறுப்பாக செயல்பட நினைக்கும் இளைஞர்களுக்கு ஏற்ற தொழில் இது என்பதால் இதில் தாராளமாக இறங்கி, முன்னேற்றம் காணலாம்!


'அவசரத்துக்குப் பசியைத் தணிக்கவும், நொறுக்குத் தீனியாகவும் பிஸ்கெட் சாப்பிடும் பழக்கம் இருப்பதால் இந்தத் தொழிலுக்கு எப்போதுமே டிமாண்ட்தான். அதேநேரத்தில் பெரிய எம்.என்.சி. நிறுவனங்களும் லோக்கல் பிராண்ட்களுக்கு நிகராக குறைந்த விலையில் விற்பனை செய்ய இறங்கிவிட்டதையும் சமாளிக்க வேண்டும். விதவிதமான சுவைகளுடன், வித்தியாசமான மார்க்கெட்டிங் உத்திகளோடு இறங்கினால் இந்தப் போட்டியை சமாளிக்கலாம், தனியரு அடையாளமும் பெறலாம். அத்துடன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் வாய்ப்புகள் உள்ளது. தென்ஆப்பிரிக்க நாடுகளில் நமது தயாரிப்புகளை விரும்பி வாங்குகின்றனர்.

இந்த பிஸினஸில் இருக்கும் டிமாண்டை போலவே சில ரிஸ்க்கான விஷயங்களும் இருக்கிறது. முன்பு சிறுதொழிலாக பிஸ்கெட் தயாரிப்பவர்களுக்கு மானிய விலையில் கோதுமை, மைதா, சர்க்கரை போன்ற மூலப்பொருட்களை அரசு கொடுத்து வந்தது. ஆனால், தற்போது மானிய விலையில் கொடுப்பதில்லை. மூலப்பொருட்களின் விலை ஏறியுள்ளதால் மீண்டும் மானிய விலையில் அவைகளை வழங்கினால் ஏற்றுமதி செய்வதற்குக் கூடுதல் பலனாக இருக்கும். இந்த ரிஸ்க் அனைத்தையும் சமாளித்து பிஸ்கெட் தயாரிப்பில் நிலைத்துவிட்டால் நீங்களும் பிராண்டட் நிறுவனமாக வளரலாம்.''

வேஷ்டிக்கு மரியாதை தந்தோம். கே.ஆர்.நாகராஜ், ராம்ராஜ் காட்டன்.

வேஷ்டிக்கு மரியாதை தந்தோம். கே.ஆர்.நாகராஜ், ராம்ராஜ் காட்டன்.



சில வருடங்களில் நானும் இன்னொரு நண்பரும் சேர்ந்து பிஸினஸ் செய்யலாம் என தனியாக வந்தோம்.  நண்பர் உற்பத்தியைக் கவனிக்க, நான் மார்க்கெட்டிங் செய்தேன். இந்த வேலைக்காக தென் மாநிலங்களிலும் ஊர் ஊராகவும் அலைந்து ஆர்டர் வாங்கினேன். ஒரு கட்டத்தில் இருவரும் பிரிய வேண்டிய நிலை. நிறுவனத்தைப் பிரித்தபோது எனது பங்காக 85 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வேஷ்டிகளை என்னிடம் தந்தார். அதை விற்று காசாக்க மீண்டும் மார்க்கெட்டிங் வேலையில் இறங்கினேன். கையில் இருக்கும் வேஷ்டிகளை விற்று முடித்தாலும், புதிய ஆர்டர்களையும் விட  முடியவில்லை. பல இடங்களிலிருந்தும் வேஷ்டி வாங்கித் தந்தேன்.
அடுத்தவரிடமிருந்து வாங்கித் தருவதற்குப் பதில் நாமே தயாரித்தால் என்ன என்று நினைத்து வேஷ்டி தயாரிப்பில் இறங்கினேன். வேஷ்டி என்றாலே கைத்தறிதான் என்பதை மாற்றி, விசைத்தறி மூலம் வெவ்வேறு ரகங்களில் தந்தேன். எளிமையாக, வாங்கக்கூடிய விலையில் தரமாக கிடைத்த வேஷ்டிகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
வேஷ்டி தயாரிப்பில் இருந்ததால் நான் எங்கு சென்றாலும் வேஷ்டியில்தான் செல்வேன். பல இடங்களில் வேஷ்டி கட்டி சென்றதால் பல அவமானங்களையும் சந்திக்க நேர்ந்தது. வேஷ்டியை பாரம்பரியமான உடை என்று சொன்னாலும், பொது இடங்களில் வேஷ்டி கட்டி செல்பவர்களுக்கு சரியான மரியாதை இல்லை என்பதை உணர்ந்தேன். அதை மாற்றினால்தான் வேஷ்டி தொழிலில் ஜெயிக்க முடியும் என்று நினைத்து, அதற்காக வேலை செய்தேன். வெற்றி பெற்றவர்கள் விரும்பிக் கட்டுவது வேஷ்டி என்று விளம்பரங்கள் செய்தேன்.
வேஷ்டி என்றாலே வெள்ளைவெளேர் என்று ஒரே மாதிரியாக இருக்கும் என்பதை மாற்றி, பல்வேறு வகைகளிலும் தந்தோம். ஒவ்வொரு பகுதி மக்களும் விரும்பிக் கட்டும் வேஷ்டி ரகங்களை ஆராய்ந்து அதற்கேற்ப தயாரித்துக் கொடுத்தோம். இன்று 2,008 ரகங்கள் உற்பத்தி செய்கிறோம். வேஷ்டியையும், வேஷ்டி கட்டுபவர்களையும் தாழ்வாக நினைத்த நிலையை மாற்றி, வேஷ்டி கட்டுவதைக் கவுரவமாகவும், வேஷ்டியை ஒரு பிராண்டாகவும் மாற்றியதுதான் எங்கள் சாதனை.''

வங்கிக் கணக்கு ஜாக்கிரதை !

வங்கிக் கணக்கு ஜாக்கிரதை !



கையில் பணத்தை வைத்துக்கொண்டு செலவு செய்யத் தயங்குபவர்கள், தவறாமல் பர்ஸில் வைத்திருப்பது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைத்தான். இந்த இரண்டுமே பாதுகாப்பானவை என்று நினைக்கிறார்கள் பலர். ஆனால், இந்த இரண்டு கார்டுகளையும் நாம் பத்திரமாக வைத்துக்கொள்ளவில்லை எனில், நம் பணம் களவுபோக நிச்சயம் வாய்ப்புண்டு. இந்த இரண்டு கார்டுகளை எப்படி பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றி இனி பார்ப்போம்.

டெபிட் கார்டு என்கிற தொழில்நுட்பமே அதிக பாதுகாப்பு வசதிகளைக் கொண்டதல்ல. நீங்கள் ஸ்வைப் செய்யும் பாதுகாப்பு குறைவான இடங்களில் ஸ்கிம்மர் கருவியைப் பயன்படுத்தி எளிதாக போலி கார்டுகளைத் தயாரித்துவிட முடியும். நீங்கள் பெட்ரோல் போடும் இடத்திலோ அல்லது மால்களில்  ஷாப்பிங் செய்யும் போதோ அல்லது ஹோட்டல்களில்  உணவருந்தும்போதோ உங்கள் டெபிட் கார்டில் இருக்கும் ரகசியத் தகவல்களை எளிதாக எடுத்துவிட முடியும். சில சமயம் உங்கள் வங்கி ஏடிஎம் மையங்களில் கார்டை நுழைக்கும் இடத்தில்கூட இந்த மோசடிக்காரர்கள் சிறிய அளவிலான ஸ்கிம்மர் கருவிகளைப் பொருத்தி தகவல்களையும் பெர்சனல் பின் நம்பரையும் திருடிவிடுவார்கள்.

டெபிட் கார்டில்தான் இந்தப் பிரச்னையா என்றால், கிரெடிட் கார்டிலும் இதேபோன்ற குறைபாடுகள் உள்ளன. ஆனால், டெபிட் கார்டில் நம் பின் நம்பரை கேட்காமலேயே பணப் பரிவர்த்தனை செய்யும் ‘பைபாஸ்’ வசதி இருக்கிறது. கிரெடிட் கார்டிலும் இந்த வசதி இருந்தது. தற்போது அப்டேட் செய்யப்பட்ட கார்டுகளில் உங்கள் பின் நம்பரை கட்டாயம் தந்தால் தான் பணத்தை பரிவர்த்தனை செய்ய முடியும்.



உங்கள் கிரெடிட் கார்டின் பின் நம்பர் தெரிந்தால், அதை வைத்து புதிய கிரெடிட்   கார்டை குளோனிங் முறையில் தயாரித்துவிட முடியும். இதை வைத்து உங்கள் கணக்கில் இருக்கும் பணத்தை எளிதாக எடுத்துவிட முடியும்.

எப்படி பாதுகாப்பது?

பொது இடங்களில் உங்கள் கண்களுக்கு எதிரே வைத்து கார்டுகளை ஸ்வைப் செய்ய அனுமதியுங்கள். கூடியமட்டும் நீங்களே பின் நம்பரை பதிவு செய்யுங்கள். மறைவான இடத்துக்குச் சென்று கார்டை ஸ்வைப் செய்வதை அனுமதிக் காதீர்கள்.

கார்டுகளை ஸ்வைப் செய்யும் கருவியின்மேல் ஏதாவது தனி இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளதா என்பதைக் கவனியுங்கள். அப்படி பொருத்தப் பட்டிருந்தால் அது ஸ்கிம்மர் கருவியாக இருக்க வாய்ப்புண்டு. அப்படியொரு சந்தேகம் உங்களுக்கு வரும்பட்சத்தில், உங்கள் கார்டுகளைப் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள். நீங்கள் பொருட்களை வாங்கும் கடைகளிலோ, பொது இடங்களிலோ வெளிப்படையாக உங்கள் பின்நம்பரை கூறாதீர்கள். அந்தக் கடைக்காரரோ அல்லது அருகில் இருப்பவரோ உங்கள் பின் நம்பரை தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது.

பின் நம்பர் இல்லாமலே பைபாஸ் செய்து உங்கள் கணக்கிலிருந்து வேறு ஒரு கணக்குக்கு ஆன்லைன் மூலம் பணத்தை பரிவர்த்தனை செய்ய முடியும் என்பதால், அதை செய்ய முடியாதபடிக்கு உள்ள லேட்டஸ்ட் தொழில்நுட்பம் கொண்ட கிரெடிட் கார்டுகளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

இன்டர்நெட் பேங்கிங்!

கிரெடிட், டெபிட் கார்டுகள் ஆபத்தானவை. எனவேதான், நான் வங்கியில் இன்டர்நெட் பேங்கிங் வசதியை ஆக்டிவேட் செய்துள்ளேன். இதனால் எனக்கு எந்தக் கவலையும் இல்லை என்று நினைக்கிறார்கள் சிலர். ஆன்லைன் ஹேக்கர்கள் மூலம் ஆபத்துகள் வர வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன.

என்ன பிரச்னை?

உங்கள் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ நீங்கள் பயன்படுத்தும் கணினியை நீங்கள் மட்டுமே பயன்படுத்துவதாக இருந்தாலும், இன்டர்நெட்டில் தோன்றும் விளம்பரங்கள் சில பிரபல இ-மெயில் தளங்களைப் போன்றும், ஆன்லைன் ஷாப்பிங் தளங்களைப் போன்றும் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த போலி இணையதளங்கள் ‘பிஷ்ஷிங்’ என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, உங்கள் இ-மெயிலின் பாஸ்வேர்டு தெரிந்து கொண்டால் போதும். உங்கள் பெர்சனல் விஷயங்கள் அனைத்தும் திருடப்படுவதற்கு வாய்ப்புண்டு.

இந்தத் தளங்களில் சென்று நீங்கள் ஆன்லைனில் உங்கள் வங்கிக் கணக்கு விவரத்தையோ அல்லது கார்டுகளின் விவரத்தையோ அளிக்கும்போது, அது அவர்களது ஹேக்கிங் தளமாக இருக்கும் பட்சத்தில், பதிவாகிய தகவல்களை அவர்கள் எளிதாக எடுத்துவிடுவார்கள். நீங்கள் அவசரத்துக்காக அருகில் உள்ள ஒரு பிரவுஸிங் சென்டருக்குச் சென்று ஒரு வங்கிப் பரிவர்த்தனை செய்ய நேரிடலாம். ஒருவேளை அந்த பிரவுஸிங் சென்டர் ஸ்கிரீன் கேப்சரிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நீங்கள் கணினி திரையில் என்ன செய்கிறீர்கள் என்பதை உங்களுக்குத் தெரியாமல் கண்காணிக்கலாம்.

எப்படி பாதுகாப்பது?

அலுவலக அல்லது வீட்டு கணினிகளைப் பயன்படுத்தும்போது,  இ-மெயில் அல்லது ஷாப்பிங் இணையதளங்களை பார்வையிட, அதன் பாஸ்வேர்டை  நீங்களே டைப் செய்து உள்நுழைவது சிறந்தது. பொது பிரவுஸிங் சென்டரில் லாக் இன் செய்யும்போது கவனமாக உங்கள் அனைத்து வேலைகளையும் முடித்த பின்பு ‘ஹிஸ்டரி’யில் பதிவான பதிவுகளை அழிக்கத் தவறாதீர்கள். அதோடு நிற்காமல் பிரவுஸர் அமைப்பில் உள்ள குக்கீஸ் பதிவுகளையும் டெலிட் செய்துவிட்டு செல்லும்போது உங்கள் பாஸ்வேர்டு திருடப்படுவது தவிர்க்கப்படும்.



நீங்கள் பயன்படுத்தும் கணினியில் நீங்கள் மவுஸை நகர்த்தாமல் கர்ஸர் எங்காவது நகர்கிறதா என்று கவனியுங்கள். அப்படி இருந்தால், உடனே அந்த கணினி மையத்தில் பிரவுஸிங் செய்வதை நிறுத்துங்கள். ஏனெனில், அந்த மையம் உங்களை ஸ்கிரீன் கேப்சரிங் அல்லது ஸ்கிரீன் வியூவர் மூலம் கண்காணிக் கிறது என்று அர்த்தம்.

உங்கள் செல்போனில் நீங்கள் இ-மெயில் மற்றும் சமூக வலைதளக் கணக்குகளை இணைத்து வைத்திருந்தால், அதனை யாரிடமும் காட்டாதீர்கள். இன்று பெரும்பாலான போன்களில் உள்ள ஷோ பாஸ்வேர்டு ஆப்ஷனைப் பயன்படுத்தி உங்கள் பாஸ்வேர்டை எளிதாக எடுக்கலாம் என்பதால் அதில் கவனமாக இருங்கள்.

பேங்கிங் ஆப்ஸ்!

கார்டுகள், இன்டர்நெட் இவையெல்லாம் பிரச்னையை ஏற்படுத்துகின்றன. இதனால் இனி இவற்றைவிட்டு நான் என் கையில் பாதுகாப்பாக உள்ள செல்போனில் மொபைல் பேங்கிங் ஆப்ஸ்களை டவுன்லோடு செய்து பயன்படுத்தப் போகிறேன் என்பவர்களுக்கும் சிக்கல் உள்ளது.

என்ன பிரச்னை?

வங்கிகளின் பெயரிலேயே போலி ஆப்ஸ்கள் வலம்வர தொடங்கியுள்ளன. இந்த ஆப்ஸ்கள் உங்கள் வங்கியின் அமைப்பைப் போலவே இருக்கும் என்பதால், உங்களுக்கு வித்தியாசம் தெரியாமல் இந்த ஆப்ஸ்களை டவுன்லோடு செய்துவிட்டால், இதில் நீங்கள் பதிவு செய்யும் உங்கள் வங்கி விவரங்கள் திருடப்பட வாய்ப்புள்ளது. இந்த போலி ஆப்ஸ்கள் இணையதளங்களில் வேகமாகப் பரவிவருவதால் உங்கள் கணக்கின் விவரங்கள் போலி ஆப்ஸ் தயாரிப்பவர்கள் கையில் சிக்க அதிக வாய்ப்புள்ளது.

எப்படி பாதுகாப்பது?

ஆப்ஸ்களை டவுன்லோடு செய்யும்போது உங்கள் வங்கியை அணுகி சரியான ஆப்ஸுக்கான லிங்கை பெற்று டவுன்லோடு செய்வது சிறந்தது. அதை டவுன்லோடு செய்யும்முன், அது உங்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ சேனல் என்றால் மட்டும் டவுன்லோடு செய்யுங்கள்.

இப்படி நீங்கள் செய்யும் வங்கி பணப் பரிவர்த்தனை வசதிகளில் உள்ள பாதுகாப்புக் குறைபாட்டில் இருந்து சமயோஜிதமாக யோசித்து, பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றினால் மட்டுமே உங்கள் பணம் திருடப்படுவதைத் தடுக்க முடியும். பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி பாதுகாத்துக் கொள்ளுங்கள்